ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்

பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இதுகுறித்து அடிக்கடி அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான அதிகாரிகள் பொதுமக்கள் அல்லது மனுதாரர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்து கொள்ளாமலேயே பதில் அளிக்கிறார்கள். எனவேதான் பல மனுக்களுக்கு அதிகாரிகள் பதில் அளித்தாலும் மீண்டும் மீண்டும் மனுக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு காரணம், அதிகாரிகள் தங்களுக்கு வரும் மனுக்களின் உண்மையான பிரச்சினை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான். பல அதிகாரிகள் பொதுமக்களின் மீதான கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தன போக்கு காட்டி வருகிறார்கள்.

1. ஒரு துறையில் ஒருவர் ஓய்வு பெற்று ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இன்னும் அவருக்கு வர வேண்டிய பலன்கள் ஏதும் வரவில்லை. காரணம்கேட்டால் அவரது பணி பதிவேடு வரவில்லை என்கிறார்கள். இந்த மாவட்டத்தில் வேலை செய்தவரின் பணி பதிவேடு இங்கேதானே இருக்கும். இதை எடுப்பதில் அதிகாரிகளுக்கு என்ன சிரமம் இருக்கும். மேலும் ஆவணங்கள் ஏதேனும் தேவை என்றால் சம்பந்தப்பட்டவருக்கு பதிவு தபால் மூலம் எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதம் எழுதி, வேலையை முடிப்பதில் என்ன சிக்கல் இருக்கப்போகிறது. எனவே எந்த துறையாக இருந்தாலும் ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக அவர்களுக்கான பலன்கள் கிடைக்கச் செய்யவேண்டும்.

2. வருவாய்த்துறைக்கு பட்டா கேட்டு ஏராளமான மனுக்கள் வருகின்றன. ஒரு கிராமத்தில் பட்டா வழங்குவதற்கு தேவையான இடம் இருக்கிறதா என்பது குறித்து பகுதி கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளருக்கு தெரியும். ஆனால், பட்டாகேட்டு மனு செய்கிறவர்களிடம் கூட்டமாக சேர்ந்து கலெக்டரை போய் பாருங்கள் என்று கிராம நிர்வாக அதிகாரிகளே பொதுமக்களை அனுப்பி விடுவது தவறான முன் உதாரணமாகும். சப்-கலெக்டர்கள், ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் கூடுதலாக அந்த விஷயத்தை கண்காணிக்க வேண்டும். தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் பணிகளை சரிபார்த்து முறையாக நடக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.

3. ஏதேனும் ஊராட்சி தலைவர் மீது ஆதாரத்துடன் கூடிய புகார்கள் வரும்போது அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது ஊராட்சிகள் உதவி இயக்குனரின் பணி. அதை விடுத்து பிரச்சினையை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது.

4. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது. குறிப்பிட்ட பகுதிக்கு அனுமதி வழங்காமல் இருப்பது. அனுமதி கிடைத்த இணைப்புகள் வழங்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அலுவலகத்திலேயே முடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேராக சென்று விசாரனை நடத்தி தீர்வு காண வேண்டும். வரும் நாட்களில் இதுபோன்ற புகார் மனுக்கள் வந்தால் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

5. போக்குவரத்து துறைக்கு வந்திருக்கும் மனுக்கள் மீது எந்த நிலுவையும் இல்லாமல் தீர்வு அளிக்க வேண்டும். எனவே இனிமேல் பொது மக்கள் குறைகள் தொடர்பாக வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?.

"கலெக்டர் என்ன சொன்னாலும், இவர்களை திருத்த முடியாது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அப்போது தான் மற்றவர்களாவது வேலை செய்வார்கள். ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதற்கான நடவடிக்கை எடுத்தால், விபத்துகள் குறையும்". என்பது மக்களின் கருத்து.  

No comments:

Post a Comment