ஆங்கோர் ஏழைக்கு

எழுத்து: பெ.கருணாகரன்

நெகிழ்ச்சியாக உள்ளது ஆட்டோ ஓட்டுநர் வாசுதேவனும் அவரது மனைவி உமாமகேஸ்வரியும் செய்துவரும் கல்விச் சேவை. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ளடங்கி இருக்கிறது கண்ணகி நகர். சென்னையின் குடிசைப்பகுதிகளில் வசித்தவர்கள் புதிதாக குடியமர்த்தப்பட்ட  இடம். இங்கு 23 ஆயிரம் மக்கள் உள்ளனர்.  எப்போதும் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலுமாக காட்சியளிக்கும் நகரில் படிப்பதற்கான சூழல் மிகவும் குறைவு.

மாலையில் பள்ளியை விட்டு வந்ததும் குழந்தைகள் பெரும்பாலான நேரத்தை அங்குமிங்கும் அலைவதும் விளையாடுவதுமாகவே கழித்துவந்தனர்.  இந்த நிலையை மாற்றி சுமார் 250 மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுத்து வருகின்றனர் இந்த தம்பதியினர்.

தினமும் மாலை 5.30 மணிக்கெல்லாம் குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலையின்  மத்தியில் 250 பள்ளி மாணவர் மாணவிகள் இலவச ட்யூசனுக்காகக் கூடிவிடுகின்றனர். வாசுதேவன் தம்பதி, தங்களுடைய மூன்று குழந்தைகளின் டியூசன் வகுப்புகளுக்கு செலவழிக்க பணமில்லாத காரணத்தால்,  வீட்டு வாசலில் அவர்களுக்கு தாங்களே பாடம் கற்பிக்கத் தொடங்க, இவர்களிடம் படிக்க வேறு சிலர் வந்து சேர, கூட்டம் அதிகமாகி அதுவே இப்போது ஓர் இலவச பாடசாலை போல மாறிவிட்டது. 

டியூஷன் படிக்க வந்த பள்ளி மாணவர்களின் கூட்டம் அதிகமானதும் இருவரால் மட்டும் சமாளிக்க முடியாத சூழல். டியூசனுக்குத் தனியாக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய கட்டாயம். பொருளாதார வசதியின்மை வேறு. என்ன செய்வதென்று புரியவில்லை. ஒருகட்டத்தில் மனைவியின் நகைகளை அடகுவைத்து ஆசிரியைகளுக்கு ஊதியம் கொடுத்திருக்கிறார்கள். அப்போது ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், மூன்று மாதங்கள் உதவி செய்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறார் வாசுதேவன். 

உமாமகேஸ்வரி, “டியூசன் ஆரம்பித்து 15 நாட்களில் நூறு பேர் சேர்ந்துவிட்டார்கள். வெட்டவெளியில உட்காரவேண்டிய நிலைமை. பலபேருகிட்ட உதவிகள் கேட்டோம். சிலபேர் ஸ்நாக்ஸ் வாங்கிக்கொடுத்தாங்க. முதல்ல ரெண்டு டீச்சர் போட்டு, ஒருத்தருக்கு 1500 ரூபாய் சம்பளம் கொடுத்தோம். என் கணவர் ஆட்டோ ஓட்டி கிடைச்ச வருமானத்துல உதவி செய்தார். உதவி என்று வருகிறவர்கள் வந்து பார்த்துவிட்டு செய்கிறேன் என்று கூறிவிட்டு போய்விடுவார்கள். எவ்வளவு சிரமம் வந்தாலும் நாங்கள் தொடர்ந்து டியூசன் வகுப்புகளை நடத்திவருகிறோம்” என்று உற்சாகமாகக் கூறுகிறார்.
இந்தப் பகுதியில் இருக்கும் இசபெல் மருத்துவமனை வளாகத்தில் சில நாட்கள் டியூசன் நடத்த இடம் அளித்திருந்தார்கள். பிறகு கூட்டம் அதிகமாகவே அவர்கள் காலி செய்யச் சொல்லிவிட்டனர். பிறகு வெட்டவெளிக்கு வகுப்புகள் வந்துவிட்டன. இலவச பாடசாலைதான் என்றாலும் வாசுதேவனும் உமாமகேஸ்வரியும் கடந்துவந்த பாதை அத்தனை எளிதானதல்ல.

“இங்குள்ள பெண்கள் வீட்டு வேலைகளுக்கும் கம்பெனிகளில் ஹவுஸ் கீப்பிங் பணிக்கும் அதிகமாக செல்கிறார்கள்.. பிழைப்புக்கு வேறு வழியில்லை. அதுதான் வாழ்வாதாரம்.  காலையில் போனால் இரவு ஏழு மணிக்கு வீடு திரும்புவார்கள். பள்ளி விட்டதில் இருந்து இரவு 7 மணி வரை பிள்ளைகள் தனியாக இருக்கவேண்டும். எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இப்போது டியூசன் அவர்களுக்கு பாதுகாப்பும் கல்வியும் அளித்துவருகிறது” என்கிறார் வாசுதேவன்.

பாடசாலைக்கு வந்த கண்ணகி, எழில் நகர் குழந்தைகளுக்கு உமாமகேஸ்வரி முதலில் கற்றுக்கொடுத்த பாடம் சுத்தம். டியூசன் ஆரம்பித்த நாட்களில் 80 சிறுவர்களுக்கு முடிதிருத்தம் செய்திருக்கிறார். சிறுமிகளுக்கு தலை சீவிவர அறிவுறுத்தியிருக்கிறார். சுத்தமாக வரவில்லை என்றால், தண்டனை உண்டு என்று செல்லமாக மிரட்டியிருக்கிறார். இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. சுத்தமான உடைகளுடன் டியூசனுக்கு வர எல்லோரும் பழகிவிட்டார்கள்.  
“எங்களால் முடிந்த அளவு செலவு செய்துவிட்டோம். எங்களிடம் இழக்க ஒன்றுமில்லை. யாராவது உதவி செய்தால் ஷெட் போட்டால் வெயில், மழைக் காலங்களில் வசதியாக இருக்கும்” என்று உதவி கேட்கும் உமாமகேஸ்வரி, கண்ணகி நகர் பெண்களிடம் சிறுசேமிப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் குடும்பச் செலவுக்காக அந்தப் பணத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

தற்போது ஐந்து ஆசிரியைகள் வகுப்பு எடுக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும்  குறைந்தபட்ச ஊதியம் 1500 ரூபாய். மாதந்தோறும் 7500 ரூபாய் தேவையாக இருக்கிறது. அந்த தொகையை அளிக்கும் நல்லுள்ளங்களைத் தேடுகிறார்கள். டியூசன் மட்டுமல்ல. ஆண்டுதோறும் அவர்களை குடும்பத்துடன் சுற்றுலாவும் அழைத்துச் செல்கிறார் வாசுதேவன். சிலருடைய உதவியைப் பெற்று மூன்று ஆண்டுகளாக வண்டலூர் பூங்காவுக்குச் சென்றுவந்திருக்கிறார்கள். இரவு நேர பாட சாலையின் எதிர்காலம் பற்றிய கவலை வாசுதேவன் தம்பதிக்கு நிறையவே இருக்கிறது.

“விரைவில் பெண்களுக்குத் தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்கவேண்டும். அப்படி பயிற்சிகள் அளித்தால் விதவைப் பெண்களுக்கு வாழ்வாதாரமாக மாறும். கண்ணகி நகர் பிள்ளைகள் படித்து உயரவேண்டும் என்பதுதான் எங்களுடைய கனவு...” என்கிறார்கள் ஒரே குரலில் இருவரும்.
உதவி செய்யவோ, உற்சாகப்படுத்தவோ அவர்களது தொலைபேசி எண்கள்...

ஆட்டோ ஓட்டுநர் வாசுதேவன்: 8678957785
உமாமகேஸ்வரி: 7299095646

No comments:

Post a Comment