துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்க பி.டெக், எம்.பி.ஏ பட்டதாரிகளா?...

உத்தரபிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் துப்புரவு  தொழிலாளர் பணிக்காக விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பி.டெக்., எம்.பி.ஏ, பி.எஸ்.சி  பட்டதாரிகள் என தெரியவந்துள்ளது.

சாக்கடையை சுத்தம் செய்வது, சாலையை பெருக்குவது போன்ற பணிகள்தான் என்பதால் இதற்கு கல்வித்தகுதி தேவையில்லை.  மாதச் சம்பளம் 17,000/-. அதனால் 114  பணியிடங்களுக்காக இதுவரை சுமார் 19,000 விண்ணப்பங்கள் வந்திருக்கிறதாம். இதில் பெரும்பாலானவர்கள் பி.டெக்., எம்.பி.ஏ, பி.எஸ்.சி  பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே உ.பியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வால்மீகி என்ற பிரிவினர் தங்களுக்கு மட்டுமே அந்தப் பணியிடங்களை ஒதுக்க வேண்டும் என போராட்டம் நடத்துவதால் தற்போது அந்த விண்ணப்பங்களை நிறுத்திவைத்திருக்கிறார்கள். 

பி.டெக் முடித்தும் வேலையின்மை, தனியார் துறையில் வேலை செய்வதைவிட அரசு வேலை சிறந்தது என்ற மனப்பான்மை, இதே சம்பளத்திற்கு வெளியூர் சென்று கஷ்டப்படுவதைவிட உள்ளூரிலேயே துப்புரவு தொழிலில் ஈடுபடலாம் போன்ற காரணங்களினால் இந்த வேலைக்கு விண்ணப்பித்ததாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

உ.பியில் இது ஒன்றும் புதிதல்ல.  கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபைக்கான பியூன் வேலைக்கு, 368 பணியிடங்களுக்கு சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களில் சுமார் 255 பேர் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருந்தவர்கள். சுமார் 25,000 பேர்  முதுகலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: விகடன்

No comments:

Post a Comment