இரண்டு வருடத்தில், ஈரோட்டை சிறந்த மாவட்டமாக மாற்ற முடியும்..

ஈரோடு மாவட்டத்தில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடுக்கவும், திடக்கழிவு மேலாண்மை பற்றிய கருத்துக்களையும் கேட்டு நடவடிக்கை எடுப்பதற்காக ஈரோடு டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் கலெக்டர் பிரபாகர் அவர்களால் 17.11.2015 (இன்று) மாலை மீட்டிங் நடத்தப்பட்டது.

பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளின் உதவியுடன் பல பிராஜெக்ட்களை செய்து வருகிறோம். சில பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு சுத்தமான பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு வருடங்களில் ஈரோடு முழுவதும் குப்பைகளே தெரியாமல் சுத்தமான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்றும், சுத்தமான பகுதியாக எந்த பஞ்சாயத்து கொண்டுவருகிறதோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

"தினசரி குப்பைகளை வீடுகளிலோ, மளிகை கடைகளிலோ நேரடியாக சேகரித்து, பிரிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால், மக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் கொட்ட வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக குப்பைகளை சேகரிப்பதனால் துப்புறவு பணியாளர்களுக்கு வேலைப்பளுவும் குறையும், பகுதிகளும் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக இருக்கும். மக்கள் குப்பைகளை வெளியே கொட்டினால் அபராதம் வசூலிக்க வேண்டும். இப்படி செய்தால், சுத்தமான ஈரோடாக மாற்றமுடியும்" என்று கொங்குமலர் சார்பாக கருத்துக்கள் முன்வைக்கபட்டன. இந்தக் கருத்துகளை ஏற்று கலெக்டர் அனைத்து அதிகாரிகளையும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

"முன்னோர் காலத்தில் செய்ததுபோல், குப்பைகளை வீட்டிலேயே மக்கள் பிரிக்க வேண்டும். மக்கும் குப்பைகளை தன் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு உரமாக போடலாம். மக்காத குப்பைகளை மக்களே விற்றுக்கொண்டால், குப்பைகளே வெளியே வராமல் தடுத்துவிடலாம். அதுமட்டும் இல்லாமல், ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதற்கான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொண்டே வருகிறோம். எவ்வளவு மழை வந்தாலும், ஈரோட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஈரோடை அமைப்பை எல்லோரும் பாராட்டியே ஆக வேண்டும். பலத்த மழையால் உயிர் சேதம் ஏற்படாமல் இருந்ததற்கு ஓடையை சுத்தம் செய்ததே காரணம். ஈரோடை அமைப்பு மூலம் ஓடையில் இருந்து சுத்தம் செய்யப்பட்ட கழிவுகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்க, மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் பிராஜெக்ட் செய்யப்பட்டு வருகிறது. பிராஜெக்ட் வெற்றிபெற்றால், தரம் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கப்படும். இரண்டு வருடங்களில் ஈரோட்டை சிறந்த மாவட்டமாக மாற்றிக்காட்ட முடியும்" என்றார் கலெக்டர் எஸ்.பிராபகர். 


இந்த மீட்டிங்கில் ஈரோடை அமைப்பு டாக்டர் சுதாகர், கொங்குமலர் கார்த்திக், ஈரோடு டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்  மற்றும் கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.