சினிமா பாணியில் கார், பைக், ரன்னிங் சேஸிங் செய்து கூலிப்படையை விரட்டிப் பிடித்து ஒரு உயிரை மீட்டிருக்கிறார்கள் ஈரோடு போலீஸ்.

கருங்கல் பாளையம் பகுதியைச்  சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அதே பகுதியைச்  சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழா அன்னதானத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதில் செந்தில்குமாரின் ஆட்கள் ஆறுமுகத்தை அடித்துவிட அதற்குப்  பதிலாக செந்தில்குமாரை போட்டுத்தள்ள முடிவெடுத்திருக்கிறார் ஆறுமுகம். சின்னத்தம்பி என்பவர் மூலம் ஆறுமுகம் திருநெல்வேலியிலிருந்து கூலிப்படையை வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

பத்து லட்சம் ரூபாய் ரேட்டும் பேசப்பட்டிருக்கிறது.

கூலிப்படையிடம் பணம் இல்லாததால் சின்னத்தம்பியிடம் அட்வான்ஸாக இரண்டு லட்சம் கேட்டிருக்கிறது. அதற்கு ஆறுமுகத்திடம் வாங்கித்தருகிறேன் என போக்குக் காட்டியிருக்கிறார் சின்னத்தம்பி. இதில் கோபம் அடைந்த கூலிப்படை சின்னத்தம்பியைக்  கடத்திக்கொண்டுபோய் வைத்துக் கொண்டு அவரின்  மனைவியிடம் 2 லட்சம் தந்தால் தான் உன் கணவரை உயிரோடு விடுவோம் என மிரட்டியிருக்கிறது.

சின்னத்தம்பியின் மனைவி பாக்கியத்திற்கு காவல்துறையே ஒரு லட்சம் ரூபாயை ரெடி செய்து கொடுத்து அவரையும் அவரது சகோதரரையும் ஒரு டூவீலரில் அனுப்பிவிட்டு, பின்னாலேயே 20 பேர் கொண்ட 6 தனிப்படையும் கார் பைக் என்று வாகனங்களில் சென்றுள்ளார்கள்.

சிபி சக்கரவர்த்தி தனி ஆளாக பைக்கில் ஹெல்மெட் போட்டபடி பின்தொடர்ந்துள்ளார்.

அப்புறம் என்ன நடந்தது?.. போலிஸ் சொல்கிறார்..

30.8.15 அன்று, காலை 11.30 மணிக்கு கூலிப்படை சொன்ன பெருந்துறைக்குச்  சென்றோம். உடனே அவன் தொடர்பு கொண்டு நந்தா கல்லூரி அருகில் வர சொன்னான். அங்கும் சென்றோம். மறுபடியும் தொடர்புகொண்டவன் வாய்க்கால்மேடு பகுதிக்குப்  பணத்துடன் வர சொன்னான். அங்கு சென்றோம்.

மதியம் 12 மணியில் டூவீலரில் வந்த ஒருவன் பணப்பையை வாங்கியதும் மடக்கினோம். ஆனாலும் அவன் தப்பித்து தனது டூவீலரை விரட்ட தொடங்கினான். அப்போது எதிரே வந்த எஸ்.பி. ஓங்கி உதைத்தார். அதிலும்   தப்பித்து மீண்டும் பைக்கில் விரைந்தான். நாங்களும் பின்தொடர்ந்து சுமார் 200  மீட்டர் தூரம் கார் மற்றும் பைக்குகளில் விரட்டிச் சென்றோம். எங்களது வேகத்திற்கு ஈடுகொடுக்க  முடியாத கொலையாளி டூவீலரை போட்டுவிட்டு வாய்க்கால் பகுதிக்குள் ஓட தொடங்கினான். நாங்கள் அவனை விடாமல் துரத்திப்பிடித்தோம். இந்த சம்பவம் அனைத்துமே மெயின் ரோட்டிலேயே நடந்ததாலும், நாங்கள் யாரென்று தெரியாததாலும் அங்கிருந்த பொதுமக்கள் பயந்து அலறத்தொடங்கிவிட்டார்கள். கொலையாளியை மடக்கிப்பிடிக்கும் வரை நாங்கள் யாரென்றே சொல்லவில்லை.

மற்றவர்கள் எங்கே என அவனிடம் கேட்டதற்கு எங்களைத்  திசைதிருப்பி வேறு இடத்தைச்  சொன்னான். ஆனாலும் அவனை மடக்கிய இடத்திலிருந்த குளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒருவன் நடவடிக்கைகள் மட்டும் வித்தியாசமாகப்பட அவனை மடக்கினோம். அவன்தான் உண்மையான இடத்தை சொன்னான்.

அவன் சொன்ன இடத்தை அடைய வயல்வெளிக்குள் செல்ல வேண்டியிருந்தது. எங்கள் அனைவருக்குமே பயம் விலகவில்லை. காரணம் கொலையாளி டைம் குறித்து வைத்து, அதற்குள் வராவிட்டால் கடத்தி வைத்திருப்பவரைக்  கொலை செய்ய சொல்லியிருந்தால் என்ன செய்வது என்கிற யோசனை.
வயல்வெளியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று பார்த்தால் ஒரு பாறையின் அடியில் இருந்த புதருக்குள் மறைந்திருந்தது கொலைகார கும்பல்.

நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்து ஓடினோம். எங்களைப்  பார்த்ததும் ஒருவர் மட்டும் எங்களை நோக்கி வந்தார். அவரை விசாரித்தால் நான்தான் சின்னத்தம்பி என்னைக்  காப்பாற்றுங்கள் என்று கதறினார். அவரை அந்த இடத்திலேயே அமர வைத்துவிட்டு அவருக்குப்  பாதுகாப்பாக 2 பேரை நிற்க வைத்தோம்.

WWW.KONGUMALAR.COM 

இதற்குள் அங்கிருந்த மற்ற மூவரும் வயல்வெளியில் ஓட தொடங்கினார்கள். நாங்களும் விடாமல் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தி அவர்களைக்  களைப்படைய வைத்தோம். கடைசியில் ஓடமுடியாமல் 2 பேர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்கள்.

மதியம் 1 மணி அளவில் அனைவரையும் பிடித்துவிட்டோம் என்பதைக் காட்டிலும் கடத்தப்பட்டவரை உயிரோடு மீட்டுவிட்டோம் என்கிற திருப்தியோடு ஈரோட்டிற்கு விரைந்தோம் 

உண்மையான போலிஸ்க்கு ஒரு சல்யூட்.


1 comment: